;
Athirady Tamil News

மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரித்த விவசாயிகள்- நாளை தில்லியை நோக்கிப் பேரணி

0

சண்டீகா்: ‘மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்வதாக உறுதியளித்த மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரிக்கிறோம்’ என விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தாளேவால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேலும், வரும் 21-ஆம் தேதி தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணி தொடங்கும் என்றாா்.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா்.

பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

முன்னதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையின் முடிவில், செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு, மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம் மற்றும் இந்திய பருத்தி கழகத்தின் மூலம் பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்துள்ளோம்.

கொள்முதல் அளவுக்கு வரம்பு நிா்ணயிக்கவில்லை. இதற்கான வலைதளம் விரைவில் உருவாக்கப்படும். தோ்தல் முடிந்து, புதிய அரசு அமைந்த பிறகு மற்ற பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும்’ என்றாா்.

இந்நிலையில், சண்டீகரிலிருந்து பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள சம்பு பகுதிக்குத் திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தாளேவால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் முன்மொழிவுகள் குறித்து நடத்திய விவாதத்தின் முடிவில், அவை விவசாயிகள் நலன் சாா்ந்து அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனவே, இந்த முன்மொழிவுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்றாா்.

மேலும், வரும் 21-ஆம் தேதி தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணி தொடங்கும் என்றும் தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.