;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபரில் நிச்சயம்: நீதி அமைச்சர் அறிவிப்பு

0

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசமைப்பில் ஏற்பாடு இல்லை.

அதற்கான தேவைப்பாடும் அரசுக்கு இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமா என என்னால் கூற முடியாது. அவ்வாறு நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு முடியும். அதற்கான சட்டபூர்வ அனுமதி அவருக்கு உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், குறைநிரப்பு பிரேரணை ஒன்றின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் நீதி அமைச்சர் என்ற வகையில் நானோ அல்லது அமைச்சரவையில் வேறு எவரோ யோசனை எதையும் முன்வைக்கவில்லை. அதற்கான உத்தேசமும் இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் அது ஜனநாயக ரீதியிலான பொறிமுறையும் அல்ல. சர்வஜன வாக்கெடுப்பைத் தவறாகப் பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல. 1982 இல் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பால் ஏற்பட்ட கறுப்புப் புள்ளி இன்னும் மாறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.