;
Athirady Tamil News

18 வயதின் கீழ் பெண்கள் கால்பந்தாட்டம் : தெல்லிப்பழை மகாஜனா சம்பியனானது

0

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய பாடசாலைகளின் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கு இடையிலான 2023 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சம்பியனாகி றினோன் தலைவர் கிண்ணத்தை சுவீகரித்தது.

இந்த சுற்றுப் போட்டியின் லீக் சுற்றிலிருந்து இறுதிப் போட்டிவரை அதிசிறந்த கால்பந்தாட்ட நுட்பங்களுடன் விளையாடி அமோக வெற்றிகளை ஈட்டி தோல்வி அடையாத அணியாக மகாஜனா கல்லூரி சம்பியனானது.

இறுதி ஆட்டம் உட்பட 5 போட்டிகளில் விளையாடிய மகாஜனா கல்லூரி 23 கோல்களை மொத்தமாக போட்டதுடன் ஒரு கோலை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தது. இதன் மூலம் இந்த சுற்றுப் போட்டியில் மகாஜனா அணியினர் எத்தகைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர் என்பது தெளிவாகிறது.

கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற இறுதிப் போட்டியில் களுத்துறை சென். ஜோன்ஸ் அணியை எதிர்கொண்ட மகாஜனா 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.

ரி. தாரனிகா 2 கோல்களையும் ரி. சஸ்மி ஒரு கோலையும் மகாஜனா சார்பாக புகுத்தினர்.

இறுதிப் போட்டி நாயகி விருதை ரி. சஸ்மி வென்றெடுத்தார்.

ரி. தாரனிக்காவுக்கு சுற்றுப் போட்டியில் பெறுமதிவாய்ந்த வீராங்கனைக்கான விருதும் அதிக கோல்கள் போட்ட வீராங்கனைக்கான தங்கப் பாதிணி விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த கோல் காப்பாளருக்கான தங்கக் கையுறை விருது சென். ஜோன்ஸ் வீராங்கனை டி தாருஷிக்கா டில்ஷானிக்கு வழங்கப்பட்டது.

சம்பியனான மகாஜனா அணியில் வை. லயன்சிகா (தலைவி), ரி, சஸ்மி, ரி. தாரனிகா, எஸ். ஹம்ஷியா, வை. ரொன்ஷானா, வை. உமாசங்கரி, ஐ. கீர்த்திகா, எம். துஸ்மிகா, ஜே. துவாரகா, ஏ. ப்ரீத்திகா, எஸ். சரனீஜா, டி. ஹர்னியாக்ஷரா, வி. விதுர்ஷிகா, எம். வைஷ்ணவி, ஜே. சன்னிதா ஆகியோர் இடம்பெற்றனர்.

இவ்வணியின் தலைமைப் பயற்றுராக சிவமகாராசா சாந்தகுமார் செயற்படுகிறார். இவர் 2011இலிருந்து இக் கல்லூரியின் பல்வேறு வயது பிரிவினரை அகில இலங்கை பாசடாலைகள் கால்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியனாக்கிய பெமைக்குரியவர்.

கல்வி அமைச்சின் விளையாட்டுத் திணைக்கள பிரதி பணிப்பாளர் உபாலி அமரதுங்க, டொக்டர் மனோரி சமரக்கோன், ஆசிய இளையோர் கால்பந்தாட்ட சிறப்பு தூதுவரும் றினோன் மகளிர் அணி வீராங்கனையுமான மலீக்கா அமித், தேசிய மகளிர் அணி வீராங்கனையும் றினோன் மகளிர் அணி வீராங்கனையுமான தர்மிகா சிவனேஸ்வரன் ஆகியோர் பரிசில்களை வழங்கினர்.

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத் தலைவர் சிறிதரன் பீரிஸ், அநுராதபுரம் கால்பந்தாட்ட லீக் தலைவரும் முன்னாள் தேசிய இளையோர் அணி கோல்காப்பாளருமான தக்ஷித்த சுமதிபால ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இது இவ்வாறிருக்க, இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் கடந்த வருடம் நடத்திய 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கால்பந்தாட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்ற மகாஜனா கல்லூரி, 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

அத்துடன் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா கால்பந்தாட்டத்தில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 2021, 2022களில் சம்பியனான மகாஜனா, கடந்த வருடம் 2ஆம் இடத்தைப் பெற்றது.

2022இல் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள மகாஜனா தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தது.

இவை அனைத்தும் மகாஜனா கல்லூரியின் பெண்கள் அணியினர் அண்மைக்காலமாக பாடசாலைகள் கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திவருவதை எடுத்துக்காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.