;
Athirady Tamil News

பசுமை அமைதி விருதுகள் விழா

0

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அவர்கள் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் தி. ஜோன் குயின்ரஸ், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எம். எஸ். ஏ. கலீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இவ் விழாவில் மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 200 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டன. முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிமொழி கணேசானந்தன் தங்கப்பதக்கம் வழங்கியும், இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த் ஆனந்தஜோதி அபிஷாகர், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியைச் சேர்ந்த சுதர்சன் வியாசகன் ஆகிய இருவரும் வெள்ளிப்பதக்கங்கள் வழங்கியும், மூன்றாம் இடத்தைப்பெற்ற ஓட்டமாவடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த முஹம்மட் முஸ்தபா மஹார் அஹமத் வெண்கலப் பதக்கம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுவரும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான விருதை இம்முறை கொழும்பைச் சேர்ந்த செல்லப்பா கிருபானந்தமூர்த்தி பெற்றிருந்தார். இவருக்கு விருதோடு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. மேலும்இ தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் சிறந்த செய்கையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மாணாக்க உழவர்களாகவும், தாவரங்களை அடையாளம் காணும் போட்டியில் அதிக எண்ணிக்கையான தாவரங்களை அடையாளம் கண்டவர்கள் தாவராவதானிகளாகவும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ் விருதுகள் வழங்கும் விழா அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.