;
Athirady Tamil News

வாக்களிக்க மாட்டோம்..ஒரு கிராமமே கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்! என்ன காரணம்?

0

ஒரு கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர்.

கருப்புக்கொடி போராட்டம்
திருவண்ணாமலை செங்குணம் கொள்ளை மேடு அருகில் ஒரு கிராமத்தில் உள்ளது. ஐந்து தலைமுறைகளுக்கும் மேல் வசித்து வரும் மிகவும் பழமை வாய்ந்த கிராமமாக இது கருதப்படுகிறது.

இங்கு சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இங்குள்ள மக்கள் நான்கு, ஐந்து கிலோமீட்டர் கடந்து அருகில் உள்ள செங்குணம் கிராமத்திற்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு நிலவி வருகிறது.

இதையடுத்து, கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் ஆகியோர் 4, 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வாக்களிக்க சிரமமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்?
அங்கு வசிக்கும் மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை தொடர்ந்து, தங்கள் கிராமத்திற்கு இந்த முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் எங்களது ஒட்டுமொத்த கிராமமே அதாவது 700 வாக்காளர்கள் கொண்ட அனைவருமே வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி நான்கு நாள்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், “தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல” போன்ற பல்வேறு வாசகப் பதாகைகளை எழுதிவைத்து கிராமமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.