;
Athirady Tamil News

இஸ்ரோவின் அடுத்த முயற்சி! நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான் 4

0

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படவுள்ள சந்திரயான் 4, அங்கிருந்து சில மாதிரிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் எஸ். சோம்நாத் (S. Somnath) தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-4 (Chandrayaan 4) திட்டம் வெற்றி பெற்றால், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா (India) பெயரிடப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அடுத்த முயற்சி
கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரோவின் சந்திரயான் 3 (Chandrayaan 3) விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி சாதனை படைத்தது.

இந்த நிலையில், இந்தியா தனது அடுத்த கட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்காக சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்தி வருவதாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்த திட்டத்துக்கமைய, சந்திராயனின் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன், அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும்.

சந்திரயான் 4
அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர் அதிலிருந்து வெளியேறும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள சில மாதிரிகளை சேகரிக்கும். இந்த மாதிரிகள் பூமிக்கு அனுப்பி வைக்கப்படும்.


சந்திரயான் 4 தற்போது வளரும் பணியில் உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கமைய, சந்திரயான் 4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலவில் தரையிறங்கும் இலக்கை கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.