;
Athirady Tamil News

இவர்களுக்காக தான் எல்லாம் செய்தேன்.. ஆனால், அவர்களே! நிர்மலா தேவி கிளப்பும் புதிய சர்ச்சை

0

மாணவிகளை தவறான வழிநடத்த முயற்சி செய்தது இவர்களுக்காக தான் என்று பேராசிரியை நிர்மலா தேவி புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சிறை தண்டனை
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஏப்.26 -ம் திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர், நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகிய நிலையில் நிர்மலா தேவி ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29 -ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.

பின்னர், ஏப்ரல் 29 -ம் திகதி பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்போது, நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்றும், தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க தண்டனையை நாளைக்கு (ஏப்.30) ஒத்திவைக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதன்படி ஏப்.30 -ம் திகதி தண்டனை விவரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் அறிவித்தார். அவர், நிர்மலா தேவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக சிறை தண்டனை பிறப்பித்து மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

புகார் மனு
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர், “இந்த வழக்கில் எனக்கு கிடைத்துள்ள 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். நான் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்படுவேன்.

இந்த வழக்கில் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்களுக்காக தான் மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சி செய்தேன். இதனால் மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

குற்றவாளிகளை விடுதலை செய்து என்னை தண்டித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும். இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் சிபிசிஐடி பொலிஸார் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7 -ம் திகதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.