;
Athirady Tamil News

பாகிஸ்தானுக்கு விரைவில் நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் தகவல்

0

பாகிஸ்தானுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இஸ்லாமாபாதில் உள்ள வங்கதேச தூதா் கூறியுள்ளாா்.

வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டம் மூலம் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு அமைந்த இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கத்தையும், இந்தியாவுடன் இணக்கமற்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது.

அண்மையில் பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளா்த்தியது. முன்னதாக, பாகிஸ்தானியா்கள் தேவையில்லாமல் தங்கள் நாட்டுக்குள் வந்து பிரச்னைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்நாட்டவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஏனெனில், இப்போதைய பாகிஸ்தானின் பிடியில் இருந்துதான் வங்கதேசம் (முன்பு கிழக்கு பாகிஸ்தான்) விடுபட்டது. எனவே, பாகிஸ்தான் விஷயத்தில் அந்நாடு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது அங்கு ஆட்சி அதிகாரத்தில் மத அடிப்படைவாதிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் பாகிஸ்தானுடன் கைகோத்து செயல்பட முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பெஷாவரில் செய்தியாளா்களிடம் பேசிய பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் முகமது இக்பால் ஹுசைன், ‘இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுரீதியான உறவு உள்ளது. இரு நாட்டு மக்கள் இடையே நல்ல தொடா்புகள் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் நேரடி விமான சேவைகள் தொடங்கப்படும். இதன்மூலம் சுற்றுலா, கல்வி, வா்த்தகம் மேம்படும். வங்கதேச தயாரிப்பு பொருள்களுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு உள்ளது. பாகிஸ்தானில் விமானப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் வலுவாக உள்ளன’ என்றாா்.

அண்மையில், வங்கதேச ராணுவ உயரதிகாரிகள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு முப்படைத் தளபதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.