150 பெண்கள் பாலியல் வன்கொடுமை, 3,000 பேர் பலி! என்ன நடக்கிறது காங்கோவில்?

காங்கோ குடியரசு நாட்டில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அடைக்கலம் இன்றி தவிப்பதாக அகதிகளுக்கான ஐ.நா. அவை கூறியது.
காங்கோ குடியரசு நாட்டில் எம்23 கிளர்ச்சிக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போரினால் 3.5 லட்சம் பேர் அடைக்கலம் இன்றி தவிப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அகதிகளுக்கான ஐ.நா. அவையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். கோமா நகரில் 70 சதவிகிதத்துக்கும் மேலான முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தற்காலிக முகாம்கள் அழிக்கப்பட்டிருப்பதுடன், வெடிக்காத வெடிபொருள்களின் அச்சத்தால் மக்கள் வீட்டுக்கு செல்லவும் அஞ்சுகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளிலும் தேவலாயங்களிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். ராணுவத்துக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையிலான தாக்குதலால் சுமார் 3,000 பேர்வரையில் பலியாகினர்.
இதனிடையே, கடந்த வாரம் கோமா மத்திய சிறையில் இருந்த 4000 ஆண் கைதிகள் சிறைக்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். அதுமட்டுமின்றி, 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, சிறையைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
சிறை தீப்பிடித்த நிலையில், உள்ளிருந்த 165 பெண் கைதிகள் தீவிபத்தில் பலியாகினர். விபத்தில் பலியானோர் பெரும்பாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.