;
Athirady Tamil News

சீமான் மீதான விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது: உயா்நீதிமன்றம்

0

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஏற்கெனவே 2011 -ஆம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், பின்னா் 2023-ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவா் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தாா். தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகாா் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

காவல் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

சாதாரணமாக விடமுடியாது: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வியெழுப்பினாா். மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்துவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல் துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவ ல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.