இணுவில் பிரதேசத்தில் கழிவுகள் பிரித்தகற்றும் நிலையத்தில் இருந்து துர்நாற்றம் – மக்கள் முறைப்பாடு

காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபைக்குரிய கழிவு பிரித்தகற்றும் நிலையத்தில் உருவாகிய துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக, சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக நேற்று (02.03.2025), தேசிய மக்கள் சக்தியின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் ஒன்றை செய்து அங்கு ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களையும், கழிவு மேலாண்மை நிலையப் பொறுப்பாதிகாரிகளையும் சந்தித்து நிலைமையை மதிப்பீடு செய்தனர்.
தொடர்ந்து, இந்த சுகாதார பிரச்சனையை உடனடியாக தீர்க்கும் நோக்கில், 10.03.2025 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில், கழிவுகளை முறையாக நிர்வகிப்பதற்கான புதிய தீர்வுகள் ,கழிவுகளை சேமிக்க மாற்றிடம் தேடி அமைத்தல் மற்றும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.
சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயற்பட்டால், இந்தக் கடுமையான சுகாதார சிக்கலை விரைவில் தீர்த்து, பொதுமக்கள் ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழ வழிவகுக்கலாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.