;
Athirady Tamil News

9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் – திகதியை அறிவித்த நாசா

0

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவது தொடர்பான அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், 3 வது முறையாக, கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையம் சென்றனர்.

8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 16
ஏறத்தாழ 9 மாதங்கள் விண்வெளி மையத்திலே தங்கி உள்ளனர். இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தால் அவர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளனர். விரைவில் அவர்களை மீட்குமாறு எலான் மஸ்கிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

தற்போது, எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16 ஆம் திகதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகிய இருவரும், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

இருவரும் பிப்ரவரி மாதம், பூமிக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இவர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இணைந்து மார்ச் 16 ஆம் திகதி பூமிக்கு வர உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.