;
Athirady Tamil News

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல்

0

• சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள். கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுவோரை அடையாளப்படுத்துங்கள். நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு.
• விடுமுறை நாள்களில் நெரிசலான இடங்களில் பொலிஸாரின் கண்காணிப்பு இருக்கும்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (29.03.2025) இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.

உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுச்சூழல் பொலிஸார், விலை மதிப்பீட்டுத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகளை அடுத்த கூட்டத்துக்கு அழைக்கவேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்தக் கூட்டத்தில் தொடர்புடைய தரப்புக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், உள்ளூராட்சி மன்றங்களுடன் தொடர்புடைய சிறிய தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாது மக்கள் என்னை வந்து சந்திக்கின்றனர். அந்த நிலைமையை மாற்றியமைக்கவேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்காகவே இருக்கின்றன. சேவையை சிறப்பாக செய்யுங்கள் எனக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்கள் கடைகளுக்கான வைப்புப் பணத்தொகையை உயர்வாக நிர்ணயித்துள்ளமை தொடர்பாக பல்வேறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டமை மற்றும் ஆளுநருக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகள் அது தொடர்பான தமது நிலைப்பாடுகளை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
உள்ளூராட்சிமன்றங்கள் சுற்றுச்சூழலை சுத்தமாகப்பேணுவது தொடர்பான விடயம் ஆராயப்பட்டது.

குறிப்பாக செம்மணி, வல்லைவெளி, கைதடி – கோப்பாய் வீதிகளில் கோழிக்கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதேபோன்று பல்வேறு இடங்களிலும் குப்பைகளைக் கொட்டுவது தொடர்பிலும் தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறு கழிவுகளைக் கொட்டுபவர்களையும், குப்பைகளைக் கொட்டுபவர்களையும் அடையாளப்படுத்திதருமாறும் தம்மால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சுற்றுச்சூழல் பொலிஸார் இதன்போது குறிப்பிட்டனர்.

முக்கியமான சந்தைகளை அண்மித்த பகுதிகளிலும், சில பிரதான வீதிகளிலும் முறையற்ற விதத்தில் வாகனங்கள் தரித்து நிறுத்தப்படுவதாகவும் இதனால் நெரிசல்கள் ஏற்படுகின்றது என்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் சுட்டிக்காட்டினர். பொலிஸார் பற்றாக்குறை இருக்கின்றது என்றும் குறிப்பாக பாடசாலை நாட்களில் பாடசாலைச் சூழலில் கடமையில் ஈடுபடவேண்டியிருப்பதால் இந்த நிலைமை இருக்கின்றது என்றும் பொலிஸார் பதிலளித்தனர். தற்போதைய நிலைமையில் பாடசாலை இல்லாத நாட்களிலாவது அந்தப் பகுதிகளில் கடமைகளில் ஈடுபடுமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார். மேலும் சாட்டி உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளிலும் விடுமுறை நாட்களில் அதிகளவானோர் வரும் நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்பட்டதுடன், அவசர தேவைக்குரிய விண்ணப்பங்களை நேரடியாக ஒப்படைக்குமாறும், எதிர்காலத்தில் இதனை நிகழ்நிலை ஊடாக மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள், வரைபடங்களுடன் உள்ளூராட்சிமன்றங்கள் தயாராக இருந்தால் விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தால் விரைவாக ஆதனமதிப்பீடு மேற்கொள்ள முடியும் என விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் விரைவாக சோலைவரி மீளாய்வை நிறைவு செய்யவேண்டும் எனவும், சோலைவரி உள்ளிட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்கான கட்டணங்களை பொதுமக்கள் வீடுகளிலிருந்தே செலுத்துவதற்குரிய இணையமேம்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

வீதி மின்விளக்குகள் பொருத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார். இது தொடர்பில் கௌரவ ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி அதன் ஊடாக அமைச்சரவைப் பத்திரம் சமர்பிப்பதற்கு ஏதுவாக யோசனைகளை வடக்கு மாகாணத்தின் சார்பில் வழங்குவதற்கு ஆளுநர் கோரினார்.

இலங்கை மின்சார சபை வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு இடத்துக்கு இடம் அதிகளவான கட்டணத்தை அறவிடுவதாகவும் தற்போது வீதி மின்விளக்குகளின் பாவனைக்கு மின்சாரக் கட்டணத்தையும் கோர முற்படுவதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலாளர்கள் தெரிவித்தனர். எனவே கடந்த காலங்களைப்போன்று இலவசமாக மின்விளக்குகள் பொருத்துவதற்கு மின்சாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் குறிப்பிட்டனர். அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீதிகளில் இலங்கை மின்சார சபை எந்தவொரு கட்டணமும் இன்றியே மின்கம்பங்களை நடுகை செய்துள்ளதை வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் சுட்டிக்காட்டினார். எனவே வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிடவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையின் ஒப்பந்தகாரர்கள், மின்சார தடங்களுக்கு இடையூறு எனத் தெரிவித்து வீதிகளில் இருக்கும் மரங்களை ஒழுங்குமுறையில்லாமல் வெட்டுவதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் குறிப்பிட்டனர். வெட்டும் மரங்களின் குப்பைகளை வீதியில் அப்படியே போட்டுவிட்டுச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சிலர் குறிப்பிட்டனர். அதை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

உள்ளூராட்சிமன்றங்களுக்குச் சொந்தமான சந்தைகளில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீதக் கழிவு அறவிடப்படுவது தொடர்பான விவகாரம் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும் ஆராயப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த கூட்டத்தில் இது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை தொடர்பாக பரிந்துகை;குமாறு கோரியதையும் நினைவுபடுத்தினார்.

கடந்த 5 ஆண்டுகளாக சந்தையை வழங்கிய குத்தகையின் சராசரி பெறுமதியைக் கணிப்பிட்டு அந்தத் தொகைக்கு விவசாய சம்மேளனங்களுக்கு சந்தை குத்தகையை ஆளுநரின் விசேட அனுமதியுடன் வழங்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. விவசாய சம்மேளனங்களே சந்தையை குத்தகை எடுத்தால் இத்தகைய கழிவு பிரச்சினைகள் எதிர்காலத்தில் எழாது என்று உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் குறிப்பிட்டனர். இல்லாவிடின், விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் சந்தைகளில் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபடலாம் என்றும் அவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகளை உள்ளூராட்சி மன்றங்கள் வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அடுத்த ஆண்டுக்காக குத்தகை வழங்குவதற்கு முன்னர் தொடர்புடைய விவசாய சம்மேளனங்கள் இதில் எதைத் தெரிந்தெடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்த முடியும் என உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். மேலும், சகல சந்தைகளிலும் ஏனைய சந்தைகளின் முதல் நாள் மரக்கறிகளின் விலைகளை ‘டிஜிட்டல்’ திரை மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

வெள்ள வாய்க்கால்கள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்குரிய சட்டநடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஆளுநர் உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்களைப் பணித்தார். சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகக் குறிப்பிட்ட உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள், பொலிஸாரின் ஆதரவைக் கோரினர். அத்துடன் சில கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அது சட்டவிரோதமானது அல்லது அனுமதிக்குமாறானது என தெரியவரும்போது அதனை தடுத்துநிறுத்துவதற்கான கட்டளையை ஒட்டினால், விடுமுறைநாள்களில் அந்தக் கட்டுமானத்தை நிறைவு செய்கின்றார்கள் எனவும் உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் குறிப்பிட்டனர்.

இவை தொடர்பில் உரிய முறையில் பொலிஸாருக்கு அறிவித்தால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிரான சட்டநடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என ஆளுநருக்கு பொலிஸார் தெரியப்படுத்தினர். எதிர்காலத்தில் அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர், உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்தக்கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, மாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.