;
Athirady Tamil News

இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் காஸா! அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்!

0

காஸாவின் பல்வேறு இடங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

வடகிழக்கு காஸாவின் அல்-துஃபா பகுதியிலுள்ள ஹஸ்ஸொவ்னா குடும்பத்தின் வீட்டின் மீது நேற்று முன்தினம் (ஏப்.16) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் பொது பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மஹ்மொத் பசல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 3 பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளதாகவும், அவர்களது தாக்குதலில் அப்பகுதியில் வாழும் ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மத்திய நகரமான நுசைராத்தில் உணவு விநியோகிக்கும் கூடாரத்தைக் குறிவைத்து இஸ்ரேல் விமானம் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.16) காலை முதல் கிழக்கு காஸாவின் பெயிட் ஹனோன் மற்றும் வடக்கு காஸாவின் பெயிட் லஹியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவினர் கிழக்கு காஸாவின் அல்-வாஃபா மருத்துவமனையின் அருகில் இஸ்ரேல் ராணுவத்தின் 4 பீரங்கிகளைத் தாக்கியுள்ளதாக அறிவித்துள்ளன.

இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், நேற்று (ஏப்.17) அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் போர் ஒப்பந்தம் முறிக்கப்பட்டு கடந்த மார்ச்.18 முதல் காஸா மீதான தங்களது தாக்குதலில் ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் 11 மூத்த அதிகாரிகளைக் கொன்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.