இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு – 2025

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை ( 17.04.2025 )காலை 09.15 மணிக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சமூக பாதுகாப்பு ச் சபையின் தவிசாளர் M.K.B திசநாயக்க அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், சமூகப் பாதுகாப்புச் சபையின் ஊடக ஓய்வூதியத் திட்டத்தில் பயனாளிகளை உள்வாங்குவதற்கு உத்தியோகத்தர்கள் கடும் பிரயத்தனம் செய்தே பயனாளிகளை சேர்ப்பதாகவும், ஆனால் இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு பயன் உள்ளது எனவும் அந்தவகையில் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கும், க. பொ. த சாதாரணம் மற்றும் உயர்தரத்தில் அதி சிறந்த சித்தி அடைந்தவர்களுக்கும் ஊக்குவிப்பு பணப்பரிசில் வழங்குவது சிறப்பானது எனவும் குறிப்பிட்டார்.
மேலும். யாழ்ப்பாண மாவட்டத்தில் 6,508 பேர் ஓய்வூதியம் பெற்றுவருவதாகவும், எமது மாவட்டம் அகில இலங்கை ரீதியாக தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்றுவருதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டு, மாணவர்களின் எதிர்காலம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், இன்றைய தினம் பிரதம விருந்தினராக வருகை தந்த மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகவும், முன்னாள் தபால்மா அதிபராகவும், முன்னாள் பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளராகவும், முன்னாள் புத்தசாசன அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றி தற்போது சமூக பாதுகாப்புச் சபையின் தவிசாளருமான M.K.B திசாநாயக்க அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு தமது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் மாணவர்களுக்கு
ரூபா. 10,000.00 முதல் ரூபா. 100,000.00 வரை புலமைபரிசில்கள் 60 மாணவர்களிற்கை வழங்கிவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சமூக பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்ட இணைப்பாளர் பா.பிரதீபன் மற்றும் பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.