ஜம்மு – காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹால்காம் பகுதியில் குதிரைகள் அல்லது நடந்து மட்டுமே செல்லக்கூடிய பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று (ஏப்.22) வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்தது. அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த தீவிரவாதிகள் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 12 சுற்றுலாப் பயணிகளின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும், அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் ஜூலை 3-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை துவங்கப்படவுள்ளது. அந்த யாத்திரைக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மிகவும் நீண்ட பாதையான சுமார் 14 கி.மீ. நீளமுள்ள பயணமானது அனந்தநாக் மாவட்டத்தின் வழியாகவே மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.