;
Athirady Tamil News

இந்தியாவுக்கு உரிய பதிலடி -பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உறுதி

0

பாகிஸ்தானின் காஷ்மீா் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக போா் தொடுக்கும் நடவடிக்கை. இதற்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானில் 5 பகுதிகள் வரை இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மீது இந்தியா போா் தொடுத்துள்ளது. போரை விரும்பாத பாகிஸ்தான் மீது இந்தியா போரைத் திணித்துள்ளது. எனவே, அவா்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது.

எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தெரியும். எதிரிகள் தங்கள் வஞ்சக இலக்கை எட்ட பாகிஸ்தான் ராணுவம் அனுமதிக்காது என்றாா்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகும் இதே கருத்தைக் கூறிய ஷாபாஸ் ஷெரீஃப், ‘இந்தியாவுக்கு பதிலடி தர பாகிஸ்தான் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறினாா்.

தாக்குதலை அடுத்து தலைநகா் இஸ்லாமாபாத், முக்கிய பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கருதப்படும் லாகூா் நகரின் வான் எல்லையை 48 மணி நேரத்துக்கு மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. 8 மணி நேரத்துக்குப் பிறகு இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்திய தூதரக அதிகாரியை அழைத்து கண்டனம்

இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தாக்குதலுக்காக தங்கள் தரப்பு கண்டனத்தைத் தெரிவித்தது. இந்தியாவின் இந்தத் தாக்குதலால் அப்பாவி குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துவிட்டனா் என்றும், இது பாகிஸ்தான் இறையாண்மை மீதான தாக்குதல் என்று அவரிடம் கூறப்பட்டது. இத்தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அவசரநிலையை அந்நாட்டு அமல்படுத்தியதால் பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.