கொள்கை ஒத்திசைவு மற்றும் சீர்திருத்தத்திற்கான பங்குதார் கலந்துரையாடல்

இலங்கையின் கொள்கை ஒத்திசைவு மற்றும் சீர்திருத்தத்திற்கான பங்குதாரர் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (09.05.2025) காலை 09.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் கடந்த 25 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச கொள்கை சீர்திருத்த வழிமுறைகளுக்கு பங்களித்துவரும் ஒரு நிறுவனம் எனவும், இந் நிறுவனமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்து இலங்கையின் தற்போதைய கொள்கைப் போக்குகள், இடைவெளிகளை அடையாளங்கண்டு ஒருங்கிணைந்த முறமைப்படுத்தப்பட்ட கொள்கைச் சீர்திருத்தச் செயற்பாடுகளை மீள் வடிவமைப்புக்கு பங்களிக்கும் வகையில் தொடர்புடைய பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழல் அபிவிருத்தி என்பது சவாலான விடயம் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து தமது புலமைகளை இக் கலந்துரையாடலில் முன்வைத்து கொள்கை வகுப்பாளர்களுக்கு அனுசரனையாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், இக் கலந்துரையாடலின் இணைப்பாளராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் கே.கஜபதி பங்குபற்றியதுடன், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய திணைக்கங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.