காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 52 பேர் பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 52 பேர் இன்று (மே 26) கொல்லப்பட்டனர். இவர்களில் 36 பேர் பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள்.
மார்ச் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பாலஸ்தீனத்திலுள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த வாரத்திலிருந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளில் உள்ள ஹமாஸ் படையினரை அழிக்கும் நோக்கத்தில் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வருகிறது.
அந்தவகையில் காஸாவின் டெய்ர்-அல்-பாலா பகுதியில் உள்ள பள்ளியைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நேற்று அதிகாலை (மே 26) நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் என 36 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
குழந்தைகளை இழந்து கதறும் பெற்றோர்
குழந்தைகளை இழந்து கதறும் பெற்றோர்AP
இஸ்ரேல் தாக்குதலில் உடமைகளை இழந்த குடும்பத்தினர் இப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இரவு உணவை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது இஸ்ரேல் ராணுவம் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
இதேபோன்று ஜபாலியா பகுதியில் நடத்தப்பட்டத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் பள்ளியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவதாகக் கிடைத்த உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதனை ஹமாஸ் மீறியதாக, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது.
ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்க வேண்டும் என்றும், எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை விடுக்கும் நோக்கத்திலும் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
2023 அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக்கப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காஸாவில் 54,000 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில், பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் காஸாவின் 90% மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், கூடாரத்திற்கு கீழ் வாழ்ந்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.