டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகினார் எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்ட எலான் மஸ்க், அக்கட்சிக்கான மிகப்பெரிய நன்கொடையாளராகவும் இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை என்ற துறையை உருவாக்கி, அதன் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டார்.
அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம், பணியாளர்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் மஸ்க் ஈடுபட்டு வந்தார். செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மட்டும் அரசின் செலவீனங்களில் ரூ. 10 லட்சம் கோடியை குறைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், மஸ்க்குக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன.
நிர்வாகத்தில் இருந்து விலகல்
அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக 130 நாள்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க ஒப்புக் கொண்டிருந்த மஸ்க்கின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், பொறுப்பிலிருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ”சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட பணிக்காலம் நிறைவடைந்தது. தேவையில்லாத செலவீனங்களைக் குறைக்க எனக்கு வாய்ப்பளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை விளக்கம்
வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், எலான் மஸ்க்கின் விலகலை ஏபி செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார்.
மேலும், அரசின் செலவீனங்களை குறைப்பதற்கான அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் முயற்சிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.