;
Athirady Tamil News

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

0

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் அம்மாகாணத்தின் ஏராளமான மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின.

இந்நிலையில், நேற்று (மே 29) மாலை பெய்த இடியுடன் கூடிய கனமழையினால், அங்குள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 1 குழந்தை உள்பட 8 பேர் பலியாகியுள்ளதாக பாகிஸ்தானின் மாகாண பேரிடன் மேலாண்மை அதிகாரம் தெரிவித்துள்ளது.

மழையினால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 5 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உள்பட 21 பேர் கனமழையினால் படுகாயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 25 வீடுகள் முழுவதுமாகவும் 24 வீடுகள் பாதியாகவும் சேதமடைந்துள்ளன. இந்த பாதிப்புகள் அனைத்தும் மர்தான், ஸ்வாபி, பெஷாவர், ஷங்க்லா, ஸ்வாட், டோர்கார், மொஹ்மாந்து, மன்ஷேரா மற்றும் ஹரிப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள கைபர் பக்துன்குவா மாவட்டத்தில், மே 31 ஆம் தேதி வரை இடி மற்றும் காற்றுடன் கூடிய கனமழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மாவட்டங்களில் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.