;
Athirady Tamil News

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

0

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சவால் விடுத்த ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் 20 நாள்களைக் கடந்தும், ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் ராணுவங்கள் போர்த்தொடுத்து வருகின்றன. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் கமேனி உள்பட 50-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கடந்த பிப். 28 ஆம் தேதி கொல்லப்பட்டனர்.

ஈரானின் முக்கிய எரிவாயு உற்பத்தி மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு  (மார்ச் 19) தீவிர தாக்குதல்களைத் தொடுத்தது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, “ஈரானிடம் தற்போது யூரேனியம் செறிவூட்டும் திறனோ, பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் திறனோ இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் இரவு (மார்ச் 19) தெரிவித்திருந்தார்.

நெதன்யாகுவுக்கு சவால் விடுக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித்தொடர்பாளரும், உயர்நிலை ராணுவத் தலைவருமான அலி முகமது நைனி, “போர்ச்சூழலிலும் நாங்கள் தொடர்ந்து ஏவுகணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், ஆயுதங்களைக் கையிருப்பு வைப்பதிலும் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. தொடர்ந்து ஏவுகணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சவால் விடுத்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில் நைனி கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடத்திய கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி வீரமரணம் அடைந்தார் என புரட்சிகரப் பாதுகாப்பு படையின் ஆதரவு பத்திரிகை நிறுவனம் ‘செபா’ உறுதிபடுத்தியுள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்னர், இஸ்ரேல் ஈரானின் உயர்நிலை ராணுவ பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானியையும், புரட்சிகர காவலர் துணை ராணுவப் படையின் பசிஜ் படைத் தலைவர் ஜெனரல் குலாம்ரெசா சுலைமானியையும் கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு தலைவரும் கொல்லப்பட்டது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.