யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்
யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(19.03.2026) இடம்பெற்றுள்ளது.
மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த குற்றம்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கணவன் – மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இது குறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன் தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடியும் ஆதாரமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதன் அடிப்படையில், அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
யாழில் வீசப்பட்ட மாமியாரின் சடலம்
அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம்(19) திருகோணமலை பகுதியில் வைத்து விரிவுரையாளரின் மகளான 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அந்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.