;
Athirady Tamil News

தென் ஆப்பிரிக்காவில் மாயமான சிறிய ரக விமானம்! பயணிகள் 3 பேரும் பலியானதாக அறிவிப்பு!

0

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மாயமான, சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தின் மீது பறந்த சிறிய ரக விமானம், கடந்த ஜூன் 8 ஆம் தேதி மாலை 3 மணியளவில் மாயமானது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் சார்பில் மாயமான விமானத்தைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதுகுறித்து, குவாசுலு-நடால் மாகாண அதிகாரிகள் நேற்று முன்தினம் (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில், விர்ஜீனியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் அதன் இலக்கை அடையவில்லை எனவும் லேடிசிமித் பகுதிக்கு அருகில் அதன் தொடர்பு முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம், அந்தச் சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதை உறுதி செய்துள்ளதாக, அம்மாகாண அதிகாரிகள் நேற்று (ஜூன் 10) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, தென் ஆப்பிரிக்க வானிலை நிலையம், குவாசுலு-நடால் மாகாணத்தில் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டக் கூடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.