;
Athirady Tamil News

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீ – பல மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் ; பல மில்லியன் ரூபாய் இழப்பு

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , விபத்தினால் பல மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு , அப்பகுதி தீப்பற்றி எரிந்தது.

தீயினை அணைக்க வைத்திய சாலை ஊழியர்கள் முயற்சிகளை மேற்கொண்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் , இராணுவத்தினர் , விமான படையினர் , பொலிஸார் , மின்சார சபையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அணைக்க பெரும் போராட்டம் நடத்தினர்.

சுமார் 05 மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மருந்து களஞ்சிய சாலைக்குள் எளிதில் தீ பற்ற கூடிய அசிட் , உள்ளிட்டவையும் காணப்பட்டமையால் தீ வேகமாக பரவியுள்ளது, இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், தீயில் ஏரிந்துள்ள நிலையில் கட்டடம் உள்ளிட்டவையும் கடும் சேதமடைந்துள்ளன.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தற்போது மருந்து களஞ்சிய சாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை , குறித்த களஞ்சிய சாலை பகுதிக்குள் அண்மையில் மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிரூட்டப்பட்ட அறை (Cool Room ) அமைக்கப்பட்டதாகவும் , அதில் ஏற்பட்ட மின் கசிவு , இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.