;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிரான போர் இலக்குகளை அடைந்துவிட்டோம்! – இஸ்ரேல் பிரதமர்

0

ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டது. மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான், ரஷியா கண்டனம் தெரிவித்தன.

இதனிடையே இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒருங்கிணைப்புடன் இஸ்ரேல் – ஈரான் என இருதரப்பிலும் போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் அச்சுறுத்தலை நீக்குவது உள்பட ஈரானுக்கு எதிரான அனைத்து போர் இலக்குகளையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது.

ஈரானின் ராணுவத் தலைமையையும் பல அரசுத் தளங்களையும் இஸ்ரேல் அழித்துவிட்டது. தெஹ்ரானின் வான்வெளியும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தோம்.

போர் நிறுத்தத்தை ஈரான் மீறினால் இஸ்ரேல் கடுமையான முறையில் பதிலளிக்கும்” என்று கூறினார்.

இதனிடையே ஈரானின் அரசு தொலைக்காட்சியில், இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.