பாகிஸ்தானில் வேகமெடுக்கும் போலியோ பரவல்! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில், 2025-ம் ஆண்டில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் வெவ்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று தொடர்ந்து பரவி வருகின்றது. இந்நிலையில், கைபர் பக்துன்குவா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் புதிய போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு வசிரிஸ்தானில் 19 மாத பெண் குழந்தைக்கு வைல்ட் 1 ரக போலியோ கிருமியினால் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதால், நிகழாண்டு (2025) துவங்கியது முதல் அந்நாட்டில் போலியோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரையில், கைபர் பக்துன்குவாவில் 8 போலியோ பாதிப்புகளும், சிந்து மாகாணத்தில் 4 பாதிப்புகளும், பஞ்சாப் மற்றும் கில்கிட் – பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களில் தலா 1 பாதிப்புகளும் உறுதியாகியுள்ளன.
கடந்த வாரம் வடமேற்கு கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 18 மாத பெண் குழந்தைக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டது. இதனால், போலியோ தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி செலுத்தும் பணியாளர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.