யாழ்ப்பாணத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளையதினம் வேலை வாய்ப்பு முகாமும் தொழில் வழிகாட்டல் செயலமர்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் குறித்த வேலைவாய்ப்பு முகாமில் முப்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது நிறுவனங்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வேலை வாய்ப்பு முகாமின் ஏற்பாட்டாளரும் டியூமாஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான
விக்னேஸ்வரன் ஐங்கரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் – நிறுவன உத்தியோகத்தர் ,மேற்பார்வையாளர்,
காசாளர், முகாமையாளர், வரவேற்பாளர், சமையலாளர், தாதியர், உதவியாளர், கணக்காளர், தகவல் தொழில்நுட்ப வேலை, சுத்திகரிப்பாளர், சாரதி, விற்பனையாளர், மருந்தாளர், என பல்வேறுபட்ட வேலைவாய்ப்புக்கு வெற்றிடங்கள் காணப்படுவதுடன் முழு நேரம், பகுதி நேரம், இணைய வழி வேலைவாய்ப்புக்களுக்கும் இதன்போது வாய்ப்புகள் காணப்படுகிறது.
பல வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றாலும் இம்முறை நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம். அத்துடன் குறித்த முகாம் ஊடாக ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதுடன்
முதற்கட்டமாக 150 இளைஞர் யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது – என்றார்.