;
Athirady Tamil News

போர் சூழலால் 45 மில்லியன் மக்கள் கடும் பசிக்குள்ளாகும் அபாயம்

0

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்குமானால், உலகளவில் மேலதிகமாக 45 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

ஜெனீவாவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில், விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மும்முனைப் போர் காரணமாக மசகு எண்ணெய் விலையில் ஏற்படும் சடுதியான மாற்றம், ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழிப்பாதைகளில் நிலவும் பதற்றம் காரணமாக போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தல், போன்ற துறைகளில் ஏற்படும் விலையேற்றமே இந்தப் பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக அமையும்.

தற்போது உலகளவில் 319 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

இந்த நிலையில், இந்தத் தற்போதைய போர்ச் சூழலால் மேலும் 45 மில்லியன் மக்கள் இந்தப் பட்டியலில் இணைந்தால், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.