;
Athirady Tamil News

65 மனித எலும்பு கூட்டு தொகுதி ; செம்மணி அகழ்வு பணிகள் நிறுத்தம்

0

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் (10) மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

65 மனித எலும்பு கூட்டு தொகுதி
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.