;
Athirady Tamil News

சிரியா – இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் ஏற்பு! அமெரிக்கா அறிவிப்பு!

0

சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர, இருநாட்டு தலைவர்களும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

சிரியாவில் துரூஸ் இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவுக்கும், பொதூயின் ஆயுதக்குழுவுக்கும் இடையில், ஸ்வேடா மாகாணத்தில் நடைபெற்ற மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டின் இடைக்கால அரசின் ராணுவப் படைகள் தலையிட்டது.

இதனைத் தொடர்ந்து, துரூஸ் ஆயுதக்குழுவுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் மோதல் துவங்கிய நிலையில், துரூஸ் படைக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல்-ஷரா ஆகியோர் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக, துருக்கி நாட்டின் அமெரிக்க தூதர் டாம் பராக் கூறியுள்ளார். இந்த போர்நிறுத்தம் கொண்டு வர துருக்கி மற்றும் ஜோர்டான் அரசுகளும் தலையிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் டாம் பராக் வெளியிட்ட பதிவில், “நாங்கள் துரூஸ், பெதூயின் மற்றும் சன்னி பிரிவினரை உடனடியாக அவர்களது மோதல்களை முடித்துக்கொண்டு, அமைதியை நிலைநாட்ட வலியுறுத்துகின்றோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, துரூஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக, ஜூலை 16 ஆம் தேதி சிரியாவின் தலைநகரில் உள்ள ராணுவ தலைமையகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டடங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.