;
Athirady Tamil News

செம்மணியில் 5 எலும்புக்கூடுகள் மீட்பு

0

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புதிதாக எலும்பு கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 07 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 30 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், எலும்பு சிலவற்றுடன் அடையாளம் காணப்பட்ட பொலித்தீன் பையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 22 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 07 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில்,36 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் 30 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 31 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 05 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 95 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 101 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எலும்புகளுடன் அடையாளம் காணப்பட்ட பொலித்தீன் பை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.