;
Athirady Tamil News

நாட்டின் ஒரே தங்கச் சுரங்கமும் இனி தேசியமயம்! நைஜர் ராணுவ அரசு அதிரடி!

0

நைஜர் நாட்டை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு, அந்நாட்டிலுள்ள ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை, தேசியமயமாக்குவதாக அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின் மூலம், அப்போதைய அரசு கவிழ்க்கப்பட்டு, ராணுவம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.

ராணுவ அரசின் ஆட்சி துவங்கியது முதல், அந்நாட்டிலுள்ள வளங்களைச் சுரங்கம் தோண்டியெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நைஜர் நாட்டின் ஒரேயொரு தங்கச் சுரங்கமான சொசைடே டெஸ் மைன்ஸ் டு லிப்டாகோவை (எஸ்.ஐ.எல்), ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக்கினல் ரிசோர்சஸ் எனும் நிறுவனம் நிர்வகித்து வந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு அந்தச் சுரங்கத்தின் அதிகப்படியான பங்குகளை வாங்கியதன் மூலம் அது அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நிறுவனம் பல அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, எஸ்.எம்.எல்-ஐ கைப்பற்றி தேசியமயமாக்குவதாக, நைஜர் ராணுவ அரசின் தலைவர் ஜெனரல் அப்துர்ரஹ்மானே டியானி அறிவித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அந்தச் சுரங்கத்தில், தொழில்துறை தங்கம் உற்பத்தி 177 கிலோ அளவிலும், கைவினை உற்பத்தி 2.2 டன்களாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அந்தச் சுரங்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். இதனால், அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் 2,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் களமிறக்கியது.

ஆப்பிரிக்க நாடுகளான புர்கினா ஃபஸோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் ராணுவ ஆட்சி அமைந்த பின்னர் அந்நாடுகளின் வளங்களைக் கட்டுப்படுத்தி வந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.