;
Athirady Tamil News

இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்பல்கள் செல்லத் தடை!

0

இஸ்ரேலுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் அனைத்தையும் துண்டிப்பதாக, துருக்கி அரசு அறிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, உடனடியாக மற்றும் நிரந்தரமான போர்நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்தி அந்நாட்டுடனான நேரடி வர்த்தக உறவுகளை துருக்கி அரசு, கடந்த 2024-ம் ஆண்டிம் மே மாதம் முறித்துகொண்டது.

இதனைத் தொடர்ந்து, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை எனக் கூறியதுடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நாஜி ஜெர்மனியின் தலைவர் அடால்ஃப் ஹிட்லருடனும் ஒப்பிட்டு துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், துருக்கி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், காஸா குறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹாக்கன் ஃபிதான், இஸ்ரேல் கடந்த 2 ஆண்டுகளாக அடிப்படை மனிதாபிமான விதிகளை மீறி காஸாவில் இனப்படுகொலை நிகழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் பேசியதாவது:

“நாங்கள் இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்கின்றோம். துருக்கியின் கப்பல்கள் இஸ்ரேலின் துறைமுகங்களுக்குச் செல்ல நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மேலும், அவர்களது விமானங்கள் எங்கள் வான்வழிப் பாதையினுள் நுழையவும் அனுமதி வழங்கப்படாது” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்தினுள் வருவதற்கு, கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, நீண்டகால நட்பு நாடுகளான துருக்கி மற்றும் இஸ்ரேலின் உறவுகள் காஸா மீதான போர் தொடங்கியது முதல் மோசமாடைந்து வந்தன.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் இருநாடுகளுக்கு இடையில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.