;
Athirady Tamil News

நேபாள சாலைகளில் ஜென் ஸி இளைஞர்கள்! இந்த முறை போராட அல்ல.. சுத்தப்படுத்த!

0

நேபாளத்தில், திங்கள்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் போராட்டம், கலவரமாக மாறி தலைநகர் காத்மாண்டு புரட்டிப்போடப்பட்ட நிலையில், இளைஞர்கள் அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக ஜென் ஸி தலைமுறை இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

வெள்ளிக்கிழமை காலை, ஏராளமான இளைஞர்கள் தங்களது கைகளில் பைகளை எடுத்துக் கொண்டு சாலைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காத்மாண்டு முழுவதும் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை வேகமாக அகற்றி, பழைய பொலிவு நிலைக்குக் கொண்டு வரும் பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், நடைப்பாதைகளை குறிப்பிடும் வெள்ளை கருப்பு பெயிண்டுகளை இளைஞர்கள் அடித்து வருகிறார்கள். மேலும் போராட்டத்தின் போது பெரிய கடைகளிலிருந்து தூக்கிச் சென்ற குளிர்பதனப் பெட்டி, மைக்ரோவேவ், மின் விசிறி போன்றவற்றை எடுத்த இடத்திலேயே மீண்டும் கொண்டு வந்து கொடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜென் ஸி அமைப்பின் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த இளைஞர்கள், போராட்டத்தின்போது, கட்டுப்பாடில்லாமல் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும் விடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.