பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் சனிக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தான் கராச்சியில் சனிக்கிழமை அதிகாலை 1.59 மணியளவில் (இந்திய நேரப்படி) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் நன்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த புதன்கிழமை(அக். 2) கராச்சியின் மாலிர் பகுதிக்கு வடமேற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவானது என பாகிஸ்தான் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்திருந்தது.