;
Athirady Tamil News

அசாம் என்கவுன்டர்: மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

0

கவுகாத்தி,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலம் கோல்ராஜ்ஹர் மாவட்டம் சலஹடி வனப்பகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டு துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்த மாவோயிஸ்டு அந்த அமைப்பின் முக்கிய தளபதியான ஹிம்ப்ராம் என்பது தெரியவந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹிம்ப்ராம் கடந்த 23ம் தேதி கோல்ராஜ்ஹர் – சலஹடி ரெயில் தண்டவாளத்தில் நடைபெற்ற கண்ணிவெடி தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.