டெல்லியில் பயங்கர கார் வெடிப்பு: 13 பேர் உயிரிழப்பு, தீவிர விசாரணை தொடக்கம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்துள்ள பயங்கர கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், டெல்லியில் சுபாஷ் மார்க் சிக்னலில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஒரு ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்தது.
இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
வெடிப்பு ஏற்பட்டதும் அருகிலிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் ITO வரை கேட்கப்பட்டுள்ளது.
வெடிப்பு நேரத்தில் காரில் 2-3 பேர் இருந்ததாக டெல்லி பொலிஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா தெரிவித்துள்ளார்.
வெடிப்பின் காரணம் மற்றும் பின்னணி குறித்து NSG, NIA, FSL உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
அருகிலுள்ள CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. காரின் உரிமையாளர் குருகானில் இருப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்காக ஹரியானா பொலிசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, லால் கிலா மெட்ரோ நிலையத்தின் சில வாயில்கள் மூடப்பட்டு, பகுதி முழுவதும் உயர் பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளன.
மாநில முதல்வர் ரேகா குப்தா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் LNJP மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து, சிறந்த சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதி குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.
