;
Athirady Tamil News

குன்றத்தூர் இரட்டைக் கொலை: 3 பேருக்கு தலா இரு ஆயுள் தண்டனை!

0

குன்றத்தூர் இரட்டைக் கொலை வழக்கில் இரண்டு பெண் உள்பட 3 பேருக்கு தலா இரு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமாக ரூ. 80,000 விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அபராதத் தொகையை பாதிக்கபட்ட இரு குழந்தைகளுக்கு வழங்கவும் , அதேபோல் அரசு உரிய நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி (32). இவர் ஓமன் நாட்டில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கணவர் வெளிநாட்டில் இருப்பதால் தேன்மொழி தனது இரு பெண் குழந்தைகளான சுரவிஸ்ரீ (6), குணஸ்ரீ என்ற ஆறு மாத கைக்குழந்தை மற்றும் தாயாருடன் தேன்மோழி தனியாக வாழ்ந்து வந்தார்.

இவரது வீட்டில் சத்யா என்ற பெண் வேலை செய்து வந்தார். தேன்மொழி பணிக்கு சென்று விட்ட பிறகு, வீட்டில் வேலை செய்த சத்யா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகிய மூவரும் சேர்ந்து தேன்மொழியின் தாயார் வசந்தாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டனர்.

பின்னர் ஆசிரியர் தேன் மொழியையும் வீட்டுக்கு வரச் சொல்லி அவரையும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த 16 சவரன் நகையை எடுத்துக் கொண்டனர். மேலும் விலை உயர்ந்த பொருள்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

ஒரு மணி நேரம் கழித்து ஆறு வயது குழந்தை சுரவிஸ்ரீ மயக்கம் தெளிந்து தனது தங்கையை அழைத்துக் கொண்டு எதிர் வீட்டில் உள்ள கன்னியப்பன் என்பவரின் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

அவர் உடனடியாக குன்றத்தூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்ததன்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், அரசு தரப்பு வழக்குரைஞர் சசிரேகா 39 சாட்சிகளை விசாரணை மேற்கொண்டு வழக்கை இறுதி செய்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பினை நேற்று (நவ. 20) மாவட்ட நீதிபதி தீப்தி அறிவுநிதி வாசித்தார்.

இதில் மூன்று குற்றவாளிகளுக்கும் மூன்று பிரிவுகளிலும் தலா இரு ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ. 80 ஆயிரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதே தீர்ப்பு மற்ற இரு குற்றவாளிகளுக்கும் பொருந்தும் எனவும், அபராதத் தொகை அனைத்தும் அந்த இரு குழந்தைகளுக்கும் அளிக்கவும் , அதேபோல் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி அரசு உரிய நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக் கொள்வதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.