;
Athirady Tamil News

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

0

ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், காணாமல் போன 279 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அருகிலிருந்த கட்டடங்களுக்கு பரவியதால், தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறியது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்நாட்டின் தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் வீரர்கள் தீயை அணைத்து மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 44-ஐ கடந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 279 பேர் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சுமார் 18 மணிநேரம் போராடி தற்போது தீயை வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீயணைக்கும் பணியின் போது, 37 வயது தீயணைப்பு வீரர் தீயில் சிக்கி பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தில் 3 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.