கர்நாடகா: ஓய்வு பெற்ற டிஎஸ்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகி பகுதியை சேர்ந்தவர் எச்ஒ துரை (வயது 75). இவர் கர்நாடக போலீசில் டிஎஸ்பி ஆக பணியாற்றி பின்னர் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற டிஎஸ்பி துரை இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துரை தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரையின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்குமுன் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் தனது மகனுடன் குஷ்டகி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். மனைவி உயிரிழந்த நிலையில் மகனுடன் வசித்து வந்த துரை வயது முதிர்வு , உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதியடைந்து வந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.