மூன்று பிள்ளைகளின் தாயுடன் காதல் ; பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன்
தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், இணையத்தளத்தில் பண முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சிறப்பங்காடி ஒன்றில் சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, தனது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து திருடப்பட்ட 61 மாணிக்கக் கற்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் திருடிய பணத்தில், 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான தனது காதலி ஒருவருக்கும், டிக்டோக் (TikTok) ஊடாக அறிமுகமான வேறு இரண்டு காதலிகளுக்கும் கையடக்கத் தொலைபேசிகளை வாங்கிக் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஓலுகலவின் கண்காணிப்பின் கீழ், அதன் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.