அனர்த்தத்தின் பின்னரான நிலமைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல்
அண்மையில் ஏற்பட்ட “டித்வா”வெள்ள அனர்த்த நிலைமைகளுக்குப் பின்னராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (24.12.2025)காலை 10.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அனர்த்த நிலைமைகளில் கடமையாற்றிய சகல திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியான மக்களுக்கு சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் 25000.00 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றளவான பணிகள் செவ்வனே செய்யப்படுகிறது எனவும், எனினும் ஒரு சில உத்தியோகத்தர்களின் கவனயீனங்களால் சில சம்பவங்களும் இடம்பெற்றதனையும் குறிப்பிட்டார். மேலும், அனர்த்தத்திற்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கூட்டம் அதிமேதகு சனாதிபதி அவர்களின் தலைமையில் சனாதிபதி செயலகத்தில்கடந்த சனிக்கிழமை (20.12.2025) காலை 09.30 தொடக்கம் மாலை 04.30 மணி வரை நடைபெற்றது எனவும், அக் கூட்டத்தில் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஒவ்வொரு துறைசார் விடயங்களாகவும், மாவட்ட ரீதியான முழுமையான விபரங்களையும் அதிமேதகு சனாதிபதி அவர்கள் கேட்டறிந்து கொண்டார் எனவும், இக் கூட்டத்தில் அதிமேதகு சனாதிபதி அவர்கள் ஒரு வார காலத்திற்குள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உட்கட்டுமானங்களின் சேத விபரங்கள் உள்ளிட்ட முழுமையாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டதனை அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இன்றைய கூட்டத்தில் அனர்த்தத்தினால் தங்கள் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட வீதி, இறங்குதுறை, விவசாயம், கடற்றொழி்ல் உள்ளடங்கிலான உட்கட்டுமான பாதிப்புக்களை ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். மேலும், சரியான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் பேணுவதன் அவசியத்தினை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு உரிய நேரத்தில் அறிக்கையிடலின் அவசியத்தினையும் வலியுறுத்தி, அனைவரையும் கூட்டுப் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட உட்கட்டுமான சேத விபரங்களை கேட்டறிந்ததுடன் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்களும் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.


