;
Athirady Tamil News

தங்கம், வைரத்தால் ஆன புதிய ராமர் சிலை; அயோத்தி கோவிலில் விரைவில் பிரதிஷ்டை

0

புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்தில், மதிப்பிட முடியாத அளவுக்கு விலை உயர்ந்த ஒரு அபூர்வமான சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. தங்கம் போல ஜொலிக்கும் இந்த பிரம்மாண்ட சிலை, வைரம், மரகதம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 10 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட இந்த சிலை, தென்னிந்திய சிற்பக்கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து சிறப்பு வாகனத்தில் இந்த சிலை அயோத்திக்கு கொண்டு வரப்பட்டு, ராமர் கோவில் வளாகத்திற்குள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. சுமார் 1,750 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 5 முதல் 6 நாட்கள் ஆகின.

இந்த சிலை, துளசிதாஸ் கோவிலுக்கு அருகே உள்ள அங்கத் டிலா பகுதியில் நிறுவ பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நிறுவுவதற்கு முன் சிலை திறப்பு விழா நடத்தப்பட்டு, அதன் பின்னர் நாடு முழுவதும் உள்ள சந்நியாசிகள், மகான்கள் முன்னிலையில் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெறும்.இந்த சிலை கர்நாடகாவைச் சேர்ந்த சில பக்தர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த திறமையான சிற்பக்கலைஞர்கள் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சிலை, அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையைப் போன்ற பிரதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.