சிறைப் பறவை டூ காதல் பறவை! ஆயுள் கைதிகள் திருமணத்துக்காக 15 நாள் பரோல்
ராஜஸ்தானில் ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரிடையே காதல் ஏற்பட்டு, தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது.
ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இரு குற்றவாளிகளான ஹனுமான் பிரசாத்தும் பிரியா சேத்தும் 6 மாதங்களுக்கு முன்னர் சந்தித்து, ஒன்றாகப் பழகி வந்தனர். இந்தப் பழக்கமே, பிற்காலத்தில் காதலாக மலர்ந்துள்ளது.
இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து, பரோல் வேண்டி நீதிமன்றத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அல்வாரில் உள்ள பரோடமேவில் திருமணம் செய்ய நீதிமன்றம் 15 நாள் அவசர பரோல் அளித்து உத்தரவிட்டது.
கடந்த 2017-ல் ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் ஹனுமான் பிரசாத் என்பவர், தன்னைவிட 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த நிலையில், தங்களின் உறவில் பெண்ணின் கணவர் இடையூறாக இருப்பதாக பன்வாரி லால் என்பவரை கொலை செய்தார். மேலும், கொலையைக் கண்டதாக மேலும் 4 குழந்தைகளையும் கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கில் பிரசாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ராஜஸ்தானில் பிரியா சேத் என்பவர், 2018 ஆம் ஆண்டில் சிங் என்பவரை டேட்டிங் செயலி மூலம் மோசடி செய்து பணம் பறித்துள்ளார். மேலும், இதனை வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சிங்கை தனது காதலனுடன் சேர்ந்து பிரியா சேத் கொலை செய்தார்.
இருப்பினும், சிங்கை பிரியா சேத் கொலை செய்த சம்பவத்தை அறிந்த நீதித் துறை, பிரியாவுக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டு, சங்கனேர் சிறையில் அடைக்கப்பட்டார்.