திருடப்பட்ட சோழர் காலச் சிலைகள் மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைப்பு: அமெரிக்கா
தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, தங்கள் சிலைகளை ஒப்படைக்குமாறு அமெரிக்கா மீது இந்தியா குற்றம் சாட்டியது.
இதனிடையே, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆவணக் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, திருடப்பட்ட சிலைகள் 1956 முதல் 1959 வரையில் தமிழகத்தின் கோயில்களில் இருப்பது புகைப்பட ஆதாரங்கள் மூலம் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இந்தச் சிலைகளை இந்தியாவிடமே ஒப்படைக்க ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைக்கவிருக்கும் சிலைகள்: சிவ நடராஜர் சிலை (சோழர் காலம் கி.பி. 990), சோமாஸ்கந்தர் சிலை (சோழர் காலம் 12-ஆம் நூற்றாண்டு), பரவை நாச்சியார் – சுந்தரமூர்த்தி நாயனார் சிலை.
இவற்றில் சிவ நடராஜர் சிலையை, ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்திடம், 2002-ல் போலி ஆவணங்கள் மூலம் டோரிஸ் வீனர் கேலரி அளித்திருப்பது தெரியவந்துள்ளது.