;
Athirady Tamil News

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

0

சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் காணொலி மூலம் பேசியுள்ளார். இதில், உலகளவில் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் நிலையான கூட்டு ஒத்துழைப்பு கொண்டுள்ளதைக்குறித்துப் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஷி ஜின்பிங் பேசியுள்ளதாக சீன ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எனினும் இது குறித்து எந்தவொரு விரிவான தகவலையும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடவில்லை.

புதினுடன் பேசியது என்ன?

மேற்குலக நாடுகளின் தலைவர்கள் சமீபகாலமாக சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், காணொலி அழைப்பு மூலம் தொடர்புகொண்டு ஷி ஜின்பிங் உடன் பேசினார்.

இதில், 2026 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை அதிகரித்துள்ளதாக ஜின்பிங் குறிப்பிட்டுள்ளதாக சீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்தும் அவை நடைமுறைக்கு எந்த அளவுக்கு சாத்தியமானவை என்பது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு நீடித்த இந்த அழைப்பில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையான சூழல் குறித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ரஷிய ஊடகங்களுக்குப் பேட்டியளித்த புதின், ரஷியா – சீனா நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு, உணமையான நலன் பேணும் நட்புறவானது எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தொடர்புகொண்டு சீன அதிபர் பேசியுள்ளார்.

வரி விதிப்பில் டிரம்ப் கெடுபிடிகளை விதித்துவரும் நிலையில், இருவரும் எதைக் குறித்துப் பேசினார்கள் என்பதை சீன ஊடகங்கள் குறிப்பிடவில்லை.

ரஷிய அதிபருடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பேசிய ஜின்பிங், சில மணிநேரங்கள் கழித்து அமெரிக்க அதிபர் டிரப்பை தொடர்புகொண்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.