;
Athirady Tamil News

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தம்பதியினரை அவமதித்து காணொளி; ட்ரம்ப் விளக்கம்!

0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோரை அவமதிக்கும் வகையிலான காணொளி ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், ஒபாமா தம்பதியினரின் முகங்கள் குரங்குகளின் உருவங்களுடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
இந்தக் காணொளி பகிரப்பட்ட சில மணிநேரங்களில் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்களும் இதற்குத் தங்களின் கண்டனங்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை, இந்தத் தவறு ஒரு ஊழியரால் தவறுதலாக இழைக்கப்பட்டதாகவும், ட்ரம்ப் அதனைப் பார்த்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனினும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், இந்தக் காணொளியை பகிருமாறு தான் தான் பணிப்புரை விடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

ஆனால், அதிலிருந்த குறிப்பிட்ட அந்த இனவாதப் பகுதியைத் தான் கவனிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

அதேவேளை அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் வரலாற்றைக் கொண்டாடும் மாதத்தில் இவ்வாறானதொரு இனவாதச் சித்தரிப்பு பகிரப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.