இலங்கை தேயிலை மீண்டும் ஆதிக்கம் ; ஈரானுடன் மீண்டும் இணைந்த இலங்கை வர்த்தகம்
ஈரானில் நிலவிய அமைதியற்ற சூழல் மற்றும் தகவல் தொடர்புத்தடைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் முன்னேற்றமடைந்து வருவதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் நிலவிய பிராந்திய அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் மற்றும் அமெரிக்காவின் தலையீடு குறித்த அச்சம் காரணமாக, ஈரானுக்கான தேயிலை கப்பல் போக்குவரத்து சுமார் ஒரு வார காலம் முற்றாக ஸ்தம்பித்திருந்தது.
எனினும், தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், ஏற்றுமதியாளர்கள் டுபாய் வழியாக மீண்டும் தேயிலை பொதிகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக தேயிலை சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்றுமதி நடவடிக்கைகள் இலங்கையின் விசேட ‘பண்டமாற்று முறைமையின்’ கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
ஈரானின் ஆண்டுக்கான தேயிலை தேவை சுமார் ஒரு இலட்சம் மெட்ரிக் டன்னாகக் காணப்படும் நிலையில், அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவாகவே உள்ளது.
இதனால் இலங்கைத் தேயிலைக்கு அங்கு தொடர்ந்து அதிக கேள்வி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.