;
Athirady Tamil News

லெபனானில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் படைகளுக்கு உத்தரவு!

0

லெபனான் நாட்டில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தளங்களின் மீது ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகளும் களமிறங்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், லெபனானின் மீதும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து, லெபனானில் மேலும் சில பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இஸ்ரேல் ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) கூறியதாவது:

“இஸ்ரேல் எல்லையில் வாழும் மக்களின் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்காக, லெபனானில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் அனுமதி வழங்கியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.